கவியரசன் கண்ணதாசன் சென்னைக்கு வந்தது சினிமாவிற்கு பாட்டு எழுதுவதற்கு அல்ல, ஆனால் சூழல் அவரை பாடலாசிரியராக்கியது. நல்ல காலம் அதனால்தான் நாம் நாலாயிரத்திற்கும் அதிகமாக நல்ல பாடல்களை பெற்றோம் என்றார் அவரது மகனும் அவருக்கு உதவியாளராகவும் இருந்த கண்மணி சுப்பு.
காலங்களில் அவன் வசந்தம்' என்ற தலைப்பில் கண்ணதாசனின் புகழ்பாடும் நிகழ்வை இசைக்கவி ரமணம் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறார்.
மாதந்தோறும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நடைபெறும் இந்த நிகழ்வில் அவருடன் கண்ணதாசனை வாசிப்பவர்களும், நேசிப்பவர்களும் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
கண்ணதாசனின் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திட்ட இந்த நிகழ்வு 26வது முறையாக நடந்த போது அவரது மகனும், தற்போது அக்கு பிரஷர் மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கும் கண்மணிசுப்பு கலந்து கொண்டார்.
அவர் தன் தந்தையார் கண்ணதாசனுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சுவையான விஷயங்களாவது..
கண்ணதாசன் சென்னைக்கு வந்தது கதை வசனம் எழுதுவதற்குத்தான், ஆனால், ‛இங்கே கதை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள் பாட்டு எழுதத்தான் ஆள் இல்லை நீ எழுதுகிறாயா?' என்று கேட்டனர்‛ சரி' என்று சொல்லி,‛ கலங்காதிரு மனமே' பாடலின் மூலமாக சினிமா பாடாலாசிரியரானார்
குடும்பத்தை குழந்தைகளை பெரிதும் நேசித்தார். தான் எழுதிய கவிதைகளையும் சரி, பெற்ற பிள்ளைகளையும் சரி, எப்போதுமே அடித்து திருத்தும் பழக்கமில்லாதவர்.
ஒரு முறை கல்லுாரியில் பேராசிரியராக இருந்த ஒருவர், என் அப்பாவை பார்க்கவந்தார். உங்களுக்கு ஒரு தகவல் தெரியுமா? உங்க மூத்த பையனுக்கு கடந்த வருடம் நான்தான் வகுப்பு எடுத்தேன்
இந்த வருடம் உங்க இன்னோரு பையனுக்கும் நான்தான் பாடம் நடத்துகிறேன் என்றார்...........
பதிலுக்கு கண்ணதாசன் நீங்க கல்லுாரியில் பேராசிரியராக இருக்கும் வரை என் மகன்களில் யாராவது ஒருவர் உங்களிடம் படித்துக் கொண்டேதான் இருப்பர் கவலைப்படாதீர் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். காரணம் என் தந்தைக்கு பதினைந்து குழந்தைகள்.
நான் பல முறை பியூசி படித்தும் அதில் தேர்ச்சி பெறவில்லை, அப்பாவிடம் போய்ச் சொன்னேன். ஏன் வராத விஷயத்திற்கு மல்லுக்கட்டுற வர்ர விஷயத்தில் ஆர்வமாக இரு என்றார்.
நான் உங்க உதவியாளாராக வர்ரேன் என்றார் ‛நல்லா வாய்யா' என்று தன்னுடன் அழைத்துச் சென்றார்.அப்போது அப்பா பாடலைச் சொல்ல சொல்ல உதவியாளர் ஒருவர் எழுதிக் கொடுப்பதுதான் வழக்கம், ஒரு முறை சொன்னதை திரும்ப சொல்லமாட்டார். சந்தேகம் கேட்பது பிடிக்காது, ஆகவே கவனமாக இருக்கவேண்டும், இல்லையேல் வார்த்தை மாறிவிடும், இந்த உதவியாளர் வேலையை நான் ரசித்து செய்தேன்.
அதன்பிறகு நான் தனியாக பாடல் எழுதப்போகிறேன் என்றேன், ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.
கண்ணதாசன் மகனாப்பா சந்தோஷம் என்றெல்லாம் அன்பொழுக பேசினாலும், பாட்டு எழுத வாய்ப்பு தரத்தயங்கினார்கள். நான்கு வருடம் முயற்சி எடுத்ததில் பத்து பாடல்கள் எழுதத்தான் வாய்ப்பு கிடைத்தது, அதில் ஒன்றுதான் இளையராஜா இசையில் பிரபலமான ‛நான் தேடும் செவ்வந்த பூ இது' என்ற பாடல்.
சரி இனி பாட்டெழுதி பிழைப்பை நடத்த முடியாது என்பது தெளிவானதும், இயக்குனர் பாலசந்தரிடம், நடிகர்களுக்கு வசன உச்சரிப்பை சொல்லிக் கொடுக்கும் உதவியாளராக சேர்ந்தேன், நீண்ட காலம் அவரிடம் இருந்தேன், இப்போது அக்கு பிரஷர் மருத்துவத்தை மக்களுக்கு செய்துகொண்டு அமைதியாக இருந்து வருகிறேன்...............
கண்ணதாசன் தனது வாழ்வியல் அனுபவங்களை தத்துவ நடையில் சொன்னதுதான் பலருக்கும் பிடித்துப் போனது.பெருந்தலைவர் காமராஜருடன் கண்ணதாசனுக்கு ஒரு சின்ன பினக்கு ஏற்பட்டு அது பெரிய பிரிவாகிப்போனது, இனியும் இந்தப் பிரிவை நீடிக்க விடக்கூடாது என்பதற்காக ஒரு பாட்டு எழுதினார். பட்டினத்தில் பூதம் படத்தில் இடம் பெற்ற ‛சிவகாமி மகனிடம் துாது செல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி.' என்பதுதான் அந்தப் பாடல்.(காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி என்பது அனைவருக்கும் தெரியும்தானே)
இயக்குனர் சூழ்நிலையைச் சொன்ன சில நிமிடத்தில் பாட்டு எழுதிவிடுவார், ஒய்வு தேவைப்படும் போது சிவகாசியில் உள்ள தனது நண்பர் ராஜசபையை பார்க்க போவது வழக்கம், அவசரம் காரணமாக ஒரு இயக்குனர் அவர் ஒய்வில் இருப்பதை பொருட்படுத்தாமல் பாடல் கேட்க சரி எழுதிக்கோ என்று சொல்லிவிட்டு ‛எனது ராஜா சபையிலே ஒரே சங்கீதம்' என்ற பாடலைச் சொன்னார்..........
கட்டோடு கூழலாடு ஆட பாடலில் ‛முளைக்காத சொல்லாட ஆட' என்று ஒரு வரி வரும் அது என்ன முளைக்காத சொல் என்று சிலர் கேட்டனர் அதற்கு ‛சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை' என்று இன்னோரு பாடல் மூலமாக பதில் தந்தார்.
எம்எஸ்வியும்,கண்ணதாசனும் ஒரு பாடலை பதிவு செய்யும் விதத்தையே தனது வறுமையின் நிறம் சிறப்பு படத்தின் காட்சியாக பாடலாக வைத்தார் இயக்குனர் பாலசந்தர், அந்தப் பாடல்தான் ‛சிப்பியிருக்குது முத்துமிருக்குது' பாடல்.
தனது திறமையை எல்லாம் வெளி்ப்படுத்த வேண்டும் என்றால் அது சொந்தப்படம் எடுத்தால்தான் முடியும் என்று நினைத்து சில சொந்தப்படம் எடுத்து படாதபாடுபட்டார். சொந்தப்படம் என்பதால் முதல் பாட்டான ‛ஜி்ல்லென்று பூத்த' ஒப்பாரி பாட்டை தைரியமாக வைத்தார் ஆனால் அது ரசிக்கப்பட்ட விதத்தில் ஒப்பாரி பாடலாக யாருக்கும் படவில்லை.........
தனக்கு நேர்ந்த துன்பங்களை சிரமங்களை கவியரசர் யாரிடமும் சொல்லி புலம்பியது இல்லை ஆனால் ஏதோ ஒரு சூழலில் அவைகளை பாடல்களாக்கிவிடுவார்
திமுகவை விட்டு விலகி வந்த நேரத்தில் எழுதப்பட்ட பாடல்தான், சட்டி சுட்டதடா கை விட்டதடாசட்டி சுட்டதடா கை விட்டதடாபுத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடாபுத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடாநாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடாமீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடாஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடாஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடாஅமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடாஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடாதர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடாதர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடாமனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
நாத்திகத்தை விட்டு ஆத்திகத்தை தழுவிய விஷயத்தை ஆராவராப் பேய்கள் எல்லாம் ஒடிவிட்டதா ஆலயமணி ஒசை நெஞ்சில் கூடிவிட்டதடா என்றெல்லாம் எழுதி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
அவர் பட்ட பாடுகளால் பெற்ற பாடல்களை நமக்கு பாடம் கற்பிக்கும் பாடங்களாக கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.......