லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் உள்ளட்ட இரு சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பத்தை கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (27) நிராகரித்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.டபிள்யூ.எஸ். பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து கட்டளையிட்டார்.
தனது சேவைபெறுநர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டத்தரணி தனது மனுவின் மூலம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
எனினும், குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்களை வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை இலங்கை காவல்துறையின் விளையாட்டுத் தொடர்பான தவறுகளைத் தடுக்கும் விசேட புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான மஞ்ஜோட் கல்ரா மற்றும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் யுவராஜ் புஷ்பா ஆகிய இரு இந்தியப் பிரஜைகளுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் மேலும் தகவல்களைத் தெரிவித்த புலனாய்வு அதிகாரிகள்இ 2026 LPL தொடரின் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்கள் இருவரும் சந்தேகநபர்களாகக் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்குப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தங்களது ஆட்சேபனையை பதிவு செய்தனர்.