கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவின் தமிழ்நாட்டில் கரூர் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசப் பணிக்கான நியமனங்களை, அண்மையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வழங்கியிருந்தார்.

அரசின் இந்த முடிவை எதிர்த்துச் சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே அரச தரப்பில் தலா 10 இலட்சம் ரூபாயும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலா 20 இலட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளன.

கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக 2020ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரச சுற்றறிக்கையில், அரசியல் கூட்டங்களில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்போருக்கு அரச பணி வழங்குவது குறித்து எவ்வித விதியும் குறிப்பிடப்படவில்லை.

இச்சம்பவம் குறித்துச் சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள சூழலில், அரச பணி வழங்குவது சாட்சியங்களை மாற்றவோ அல்லது விசாரணையில் திசைதிருப்பலை ஏற்படுத்தவோ வாய்ப்பாக அமைந்துவிடும் என மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசப் பணி நியமனங்கள் செல்லுபடியாகாது என அறிவித்து, அது தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதன்போது, 'பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குச் சுய தொழில் தொடங்குவதற்கான பயிற்சி வழங்கி, அவர்களைச் சுய தொழில் முனைவோராக ஏன் மாற்றக்கூடாது?' என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அத்துடன், 'அரசியல் நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அரச வேலை வழங்கினால், சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அல்லது அரச பேருந்து மோதி உயிரிழப்போரின் குடும்பங்களுக்கும் அரச வேலை வழங்கப்படுமா?' என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Bootstrap