நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (27) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை (28) காலை 11 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பலத்த காற்று காரணமாக வீடுகளின் கூரைகள், மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் சேதமடையக்கூடும் என்பதுடன், மரங்களின் கிளைகள் முறிந்து விழுதல் அல்லது மரங்கள் வேரோடு சாய்வதனால் பொதுமக்களுக்கும் சொத்துகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், பயிர்களுக்கும் சேதம் ஏற்படக்கூடும் என்பதுடன், தாழ்நிலக் கடலோரப் பகுதிகள் கடல் அலைகளினால் பாதிக்கப்படும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இந்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது.

இதன்காரணமாக துறைமுகங்களுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள படகுகள் மோதிக்கொள்வதனால் சேதமடையும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Bootstrap