மகாராஷ்டிரா மாநிலம் ( தானே) மாவட்டத்தில் உள்ள பிவண்டியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (30) இரவு 11:00 மணி முதல் 11:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், பிவண்டியில் அமைந்துள்ள 'கோஹினூர்' கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.
48 அறைகளைக் கொண்ட இந்த 4 மாடிக் கட்டிடம் ஏற்கனவே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், இதனைப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தக் கூடாது (குடியிருப்புக்குத் தகுதியற்றது) என பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் உடனடியாக விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, தானே பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் தீயணைப்புப் படை ஆகிய பல்துறை அமைப்புகள் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இன்றைய ( 31) காலை நிலவரப்படி, இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 முதல் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.