'அப்பாவால் இப்போது கிடைத்திருக்கும் பொறுப்பு என்பது மிகப் பெரியது. அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது' என தமிழக முதல்வர் விஜய்யின் மகனும், 'சிக்மா' பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது தந்தை பற்றியும், 'சிக்மா' பட அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில் அவர், 'புதிய வரலாறு படைத்து அப்பா அடைந்திருக்கும் இந்த இடம் என்பது மிகப் பெரியது. அதன் அழுத்தம் எங்கள் மீதும் இருக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறோம். அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இருக்கிறது.
அப்பா நடித்த 'கத்தி' படம்தான் லைகா நிறுவனம் தயாரித்த முதல் படம். என் முதல் படத்தையும் லைகா நிறுவனம் தயாரிப்பதை மிகவும் நெருக்கமாக உணர்கிறேன்'' என்றார்.
ஹாலிவுட்டில் ஜேசன் ஸ்டெதமை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அவருடன் தமிழ் நடிகர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் 'அப்பாதான்' என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய ஜேசன், 'எனக்கு எல்லா உதவிகளையும் செய்ய அப்பா தயாராக இருந்தாலும் என் முயற்சியில் நான் உருவாக வேண்டும் என்று விரும்பினார். எனக்கும் அந்த எண்ணமே இருந்தது. இருவரின் விருப்பங்களும் ஒன்றாகவே இருந்தன. நான் நானாக இருந்தால் மக்கள் என்னை புரிந்துகொள்வார்கள்' என்றார்.
தனது 'சிக்மா' படம் பற்றி பகிர்ந்துகொண்ட ஜேசன், இந்த படத்தில் தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடியிருப்பதாக தெரிவித்தார்.
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த ஆக் ஷன் அட்வென்சர் காமெடி படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமன் இசை அமைத்துள்ள இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூலை 31-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.