UAE Lottery-ல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார்.
சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இவர், 18 வயதில் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வேலை தேடி சென்றார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆறு சகோதரிகளின் திருமணத்திற்கும் குடும்ப நலனுக்கும் அர்ப்பணித்தார்.
2006-இல் திருமணம் செய்து அமீரகத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் இந்தியாவில் டைல்ஸ் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டார். ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக மீண்டும் அமீரகத்திற்கு திரும்பி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார்.
சுனில் மற்றும் அவரது மனைவி 12 ஆண்டுகள் குழந்தை பெற முடியாமல் போராடினர். பல்வேறு சிகிச்சைகளில் சேமிப்புகளைச் செலவழித்தும், நம்பிக்கையை இழக்கவில்லை. இறுதியில், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார்.
'அந்தக் காலம் எங்கள் வாழ்க்கையின் மிகக் கடினமான காலம். ஆனால் நம்பிக்கையை விடாமல் இருந்தோம்,' என அவர் கூறினார்.
அவரது மகள், மனைவி மற்றும் தன்னுடைய பிறந்தநாள் திகதிகளினை வைத்து வாங்கிய லொட்டரி சீட்டே அவருக்கு 30 மில்லியன் திர்ஹாம் அதிர்ஷ்டத்தை தந்தது.
'பணம் முக்கியமல்ல. என் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்ததே மிகப் பெரிய பரிசு,' என சுனில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வீட்டை கட்டி முடித்து, மகளின் கல்வியை உறுதி செய்து, பாதுகாப்பற்ற குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளார்.
'மக்கள் என்னை நினைவில் கொள்ள வேண்டியது இந்த வெற்றிக்காக அல்ல, நான் செய்த உதவிகளுக்காக,' என அவர் கூறியுள்ளார்.