உலகம் முழுவதும் கோடை வெயில் சாதனை அளவை எட்டி வரும் நிலையில், வெளியில் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களைக் காக்கும் வகையில் ஜப்பான் நிறுவனம் ஒன்று "மனிதர்களுக்கான ஃப்ரிட்ஜ்" என்ற புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடுமையான வெப்பத்தில் வேலை செய்பவர்கள் இந்தச் சிறிய அறை போன்ற சாதனத்திற்குள் சென்ற சில வினாடிகளிலேயே அவர்களின் உடல் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துவிடுகிறது.
கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் வெப்ப பக்கவாதம் போன்ற ஆபத்துகளில் சிக்காமல் இருக்க இது பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனத்திற்குள் ஒருவர் மட்டுமே அமர முடியும். உள்ளே சென்று கதவுகளை மூடி குளிர்சாதனத்தை ஆன் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எளிதாக நகர்த்திச் செல்ல முடியும் இதற்காகப் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மாற்றங்கள் எதுவும் தேவையில்லை.
வெயிலில் வேலை செய்பவர்கள் இதற்குள் 5 முதல் 10 நிமிடங்கள் அமர்ந்தாலே உடல் வெப்பம் தணிந்துவிடும். மேலும், பாதுகாப்பு கருதி 20 நிமிடங்களுக்குப் பிறகு இதன் குளிர்ச்சி நிலை தானாகவே குறைந்துவிடும் தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது.
வழக்கம்போல தனது விசித்திரமான மற்றும் பயனுள்ள கண்டுபிடிப்புகளால் ஜப்பான் மீண்டும் ஒருமுறை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.