பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் தவறுதலாக டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கொல்கொத்தாவில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட வீடொன்றில் வாழ்ந்துவருபவர் கஷ்மிரா ஷா (36). கஷ்மிராவின் கணவர் பை தைக்கும் வேலை செய்ய, கணவருக்கு உதவியாக சேலைகளுக்கு எம்ப்ராய்டரி செய்யும் வேலை செய்கிறார் கஷ்மிரா.
சமீபத்தில், தனது வங்கிக்கணக்கில் வீட்டு எரிவாயுவுக்கான உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிவதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார் கஷ்மிரா.
அப்போது வங்கி அலுவலர் ஒருவர் கஷ்மிராவின் வங்கிக்கணக்கில் 99,99,99,997 ரூபாய் இருப்பதாகக் கூற, அதிர்ச்சியடைந்துள்ளார் அவர்.
விடயம் என்னவென்றால், அவரது வங்கிக்கணக்கில் தவறுதலாக அந்தத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
கணினி அல்லது மென்பொருள் கோளாறால் அந்த தவறு நடைபெற, அதனால் அந்த மாவட்டத்திலுள்ள மொத்த வங்கிப் பரிவர்த்தனைகளும் முடங்கிவிட்டனவாம்.
இன்னொரு விடயம் என்னவென்றால், கொல்கொத்தாவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணான நுபூர் குப்தா என்னும் கணக்கிலும் இதேபோல 47 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்க, அவர் அது குறித்து வங்கிக்கு புகாரளிக்க, வங்கி ஊழியர்கள், பொலிசார், வருமான வரித்துறை அதிகாரிகள் என ஒரு பெருங்கூட்டமே அவரது வீட்டுக்கு வர அங்கு பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
எதனால் இந்த தவறு நேர்ந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.