சென்னை: 12 மணி வரை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-வினர் போரட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகம் முழுவதுமுள்ள திமுக-வினர் தங்களின் தலைவர் இது செய்யப்பட்டதை கண்டித்து சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
திருவாரூர், பொள்ளாச்சி, ராசிபுரம், தஞ்சை, ஈரோடு, புதுக்கோட்டை, விழுப்புரம் என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் திமுக-வினர் போரட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
இதேவேளை,
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கனிமொழி எம்.பி, எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் என்று கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். உச்சக்கட்ட அடக்குமுறையும், அரசியல் பழிவாங்கும் போக்கும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.
ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;
கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்; கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. கருத்துக்களை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியினர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பொருந்தாத செயலாகும்.
எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.