ஜப்பானில் கோடைக்கால வெப்பம் தீவிரமடைந்து வரும் நிலையில், டோக்கியோவிலுள்ள தமா உயிரியல் பூங்காவில் (Tama Zoological Park) வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் மூன்று பெண் சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.
கடந்த ஜூலை மாத இறுதியில், ஒரே வார இடைவெளியில் 3 முதல் 15 வயதுக்குட்பட்ட 'முகி' (Mugi - 3), 'இச்சிகோ' (Ichigo - 11), மற்றும் 'லுவேனா' (Luena - 15) ஆகிய மூன்று பெண் சிங்கங்கள் உயிரிழந்தன.
உடற்கூறாய்வு முடிவுகளில், நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) மற்றும் பல உறுப்புகள் செயலிழந்தமையே அவற்றின் இறப்புக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தற்போது மேலும் மூன்று சிங்கங்கள் (இரண்டு ஆண், ஒரு பெண்) உடல்நலக் குறைவால் எழுந்து நிற்க முடியாத நிலையில் உள்ளதாகவும், அவற்றுக்கு திரவ ஆகாரங்கள், மருந்துகள் மற்றும் விட்டமின்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நான்கு சிங்கங்கள் குணமடைந்து வரும் நிலையில், ஆறு சிங்கங்கள் ஆரோக்கியமாக உள்ளன. அவை குளிரூட்டி மற்றும் பாரிய மின்விசிறிகள் வசதி கொண்ட பிரதித்யேக அறைகளுக்கு மாற்றப்படவுள்ளன.
இதேவேளை, ஜப்பானில் இந்த கோடைக்காலத்தில் மாத்திரம் 43,000-க்கும் மேற்பட்டோர் வெப்பவாதத்தால் (Heatstroke) பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை ஆபத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் தங்களைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளப் பல்வேறு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை அந்த நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.