வீதி விபத்தில் காயமடைந்த 'ரந்தெனியா பண்டார' யானை உயிரிழந்தது!

கேகாலை, ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 'ரந்தெனியா பண்டார' என்ற யானை, மணம்பிட்டி பகுதியில் நடைபெற்ற பெரஹரா நிகழ்வுக்காக பாரவூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டபோது ஏற்பட்ட வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில், ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) அதிகாலை உயிரிழந்துள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி, மெல்சிரிபுர – ஓமரகொல்ல பகுதியில் யானையை ஏற்றிச் சென்ற லொறி இயந்திரக் கோளாறால் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, யானைப் பாகன் யானையை லொறியிலிருந்து இறக்கி பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குப் பின்னர் யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக அதன் உரிமையாளரின் கேகாலை, ரந்தெனிய இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யானை உயிரிழந்துள்ளது.

Bootstrap