இத்தாலியில் கோடைகாலத்தின் நான்காவது வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், வியாழக்கிழமையன்று நாட்டின் 27 முக்கிய நகரங்களுக்கும் அதிஉயர் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 25 நகரங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டின் தெற்கே உள்ள மெஸ்சினா (Messina) மற்றும் ரெஜியோ கலாப்ரியா (Reggio Calabria) ஆகிய இரு நகரங்கள் மட்டுமே குறைந்த அளவிலான 'அம்பர்' எச்சரிக்கையில் (Amber alert) இருந்தன.
நீடித்த அதிக வெப்பநிலை காரணமாக இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களுக்கும் கடுமையான சுகாதார ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பதையே இந்தச் சிவப்பு எச்சரிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் பகலின் வெப்பமான நேரமான காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வெப்பம் மற்றும் நேரடி சூரிய ஒளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், அதிகளவில் திரவ ஆகாரங்களை அருந்துமாறும் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டில் 27 நகரங்களுக்கும் ஒரே நேரத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை எனச் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளதுடன், வார இறுதி வரை இந்த நிலைமையில் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய தரைக்கடற்பகுதியில் வலுவடைந்து ஐரோப்பாவின் பெரும்பகுதிக்குப் பரவியுள்ள வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் புயல் (North African anticyclone) காரணமாகவே இந்த வெப்ப அலை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.