செம்மணி என்புத் தொகுதிகள் ஆய்வு விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் - ரவிகரன்

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (5) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சபையில் அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஒகஸ்ட் 4ஆம் திகதி நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 481 மனித எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒப்புதலுடன் அவர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மனிதப் புதைகுழி விடயத்தில் அடையாளம் காணப்பட்ட எலும்புத்தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுப்பது என்பது முதற்கட்ட செயற்பாடாகும்.

அதன் பிற்பாடு என்புமாதிரிகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்வது இரண்டாவது நடவடிக்கையாகும். அதனைத் தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் அறிவியல் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிப்பார்கள்.

மூன்றாவது கட்டமாகவே காணாமல்போன உறவுகள் தொடர்பான தேடுதல் விவகாரங்கள் ஆரம்பமாகும்.

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது கைதுசெய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடு வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு பாதிக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணுக்களைச் சேகரித்து அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதுவும் இதுவரை உருவாக்கப்படாத நிலையே காணப்படுகிறது.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் பங்கேற்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான ரனித்தா ஞானராசா அவர்களும் அண்மையில் இதுதொடர்பில் வலியுறுத்தியிருக்கிறார்.

எனவே இதுதொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும் என இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.

Bootstrap