சென்னையில் உள்ள தான் படித்த 'தாய் சத்யா மெட்ரிகுலேஷன்' பள்ளியின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், தாய்மொழி குறித்துப் பேசியது தமிழகத்தில் மீண்டும் மொழி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், "நான் படித்த காலத்தில் எனக்குச் சரியாக ஆங்கிலம் பேச வராது. ஆனால் தமிழ் நன்றாகத் தெரியும். இப்போதோ நான் சந்திக்கும் 10 பேரில் 8 பேருக்குத் தமிழைப் படிக்கவோ எழுதவோ தெரியவில்லை.
தாய்மொழி தெரியாது என்பதை பெருமையாகச் சொல்வது பெருமையல்ல, அது அவமானம். தாய்மொழியை கற்றுக்கொள்வது கட்டாயம், ஆங்கிலம் ஒரு கூடுதல் தகுதி மட்டுமே" என்று பெல்ஜியம் படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும், தனது பழைய தமிழாசிரியருக்கு நன்றி தெரிவித்த தனுஷ், அப்பள்ளியின் புதிய 3 தளக் கட்டிடத்தை சீரமைக்க உதவினார். இதற்கு நன்றிக்கடனாக அப்பள்ளி நிர்வாகம் அந்தப் புதிய கட்டிடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயரிட்டுள்ளது. தனுஷ் அரசியலுக்கு வரக்கூடும் என்று வதந்திகள் பரவி வரும் சூழலில், தாய்மொழி குறித்த அவரது இந்தப் பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.