டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 26ம் திகதி அதிகாலை 5 மணியளவில் டொராண்டா நகரின் மையப்பகுதியான யுனிவர்சிட்டி அவென்யூவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்து தப்பிச் செல்வதை தூதரக காவலர் கண்டுள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து வெள்ளை நிற காரை துரத்திய பொலிஸார், ஒருகட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்த துரத்தலை கைவிட்டது.
இந்நிலையில் அமெரிக்க தூதரகம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இரண்டு பேரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைவர் டெம்கிவ், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது ஜென்-உல்-அபிதீன் சையத் என்ற இளைஞர் ஒருவரும், பெயர் வெளியிடப்படாத 15 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் மீது தீவைப்பு, ஆயுதச் சட்ட மீறல்கள், சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்களை குறிவைத்து தாக்குதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், காவல்துறையிடம் இருந்து தப்பித்தல் ஆகிய பல கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை பிடிப்பதில் எந்தவொரு சமரசமும் இருக்காது என்று அப்போதே தெரிவித்தேன் என காவல்துறை தலைவர் டெம்கிவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல் சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது நபர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மறைக்கப்பட்ட செய்தியியல் செயலிகள்(Encrypted messaging apps) மூலம் இந்த தாக்குதல் நடத்த அவர்கள் கட்டளை பெற்று இருப்பதாகவும், இதற்கு மாறாக அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்றும் டெம்கிவ் தெரிவித்துள்ளார்.