அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மீதான கூடுதல் வரி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் முன்னணி கட்சியான ஜமாஅத்-ஏ-இஸ்லாமி (Jamaat-e-Islami) விடுத்த அழைப்பையேற்று கராச்சி, லாகூர், பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரிய பேரணிகளும் வீதி மறியல்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதனால் நாட்டின் பிரதான வீதிகளின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது.
அமெரிக்க-ஈரான் போர் மற்றும் சர்வதேச சந்தை சீர்குலைவு காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன.
அத்துடன், அரசாங்கம் புதிதாக விதித்துள்ள பெட்ரோலிய வரியால் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்த போராட்டத்தின் போது உரையாற்றிய ஜமாஅத்-ஏ-இஸ்லாமி தலைவர் ஹஃபீஸ் நயீமுர் ரஹ்மான் (Hafiz Naeemur Rehman), சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்காக ஏழை மக்களை துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனக் கடுமையாகச் சாடினார்.
தற்போதைய போராட்டங்கள் ஆரம்பகட்டமே எனக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் வரி மற்றும் மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து மாகாண ஆளுநர் இல்லங்களுக்கு முன்பாக தொடர் மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
சர்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்தும் மத்தியஸ்தராகத் தன்னை வெளிப்படுத்த முனையும் பாகிஸ்தான் அரசு, சொந்த நாட்டில் வெடித்துள்ள இந்த கடும் பொருளாதார நெருக்கடியாலும் மக்கள் கொந்தளிப்பாலும் பெரும் திணறலைச் சந்தித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.