2026 காமன்வெல்த் போட்டியில் (Glasgow CWG 2026) ஆடவர் +90 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வால் (Narender Berwal), சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, அவரைச் சிரிக்கவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என 39 பதக்கங்களை வென்று 4ஆவது இடத்தைப் பிடித்தது. இதில், குத்துச்சண்டை வீரர்கள் மட்டும் 10 பதக்கங்களை வென்று வாகை சூடியிருந்தனர். மேலும், ஆண்களுக்கான 90+ கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் நரேந்தர் பெர்வால். இவர், தாம் வாங்கிய பதக்கத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் காண்பித்து பாராட்டு பெற்றார்.
அப்போது பிரதமரிடம் உரையாடிய நரேந்தர் பெர்வால், சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்துகொண்டதுடன், பிரதமரையே சிரிக்கவைத்த சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் (World Military Games) தனக்கு எதிராக ஒரு பாகிஸ்தானிய வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், அந்தப் போட்டியில் தோற்கக் கூடாது என்று தனது ராணுவ சக வீரர்கள் தன்னிடம் கூறியதையும் நரேந்தர் பெர்வால் நினைவுகூர்ந்தார்.
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி நரேந்தர் பெர்வால் வெற்றிபெற்றபோதும், காயம் காரணமாக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. அதேபோல் தோல்வியுற்ற பாகிஸ்தான் வீரரும் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. இருவரும் மருத்துவமனையில் சந்தித்த நிலையில், அந்தப் பாகிஸ்தான் வீரர் நரேந்திரடம், "உங்கள் பெயர் நரேந்தர், உங்களது பயிற்சியாளரின் பெயர் நரேந்தர் (நரேந்தர் ராணா), உங்கள் பிரதமரின் பெயரும் நரேந்திர மோடி.. எனக்கு இந்த 'நரேந்தர்' என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பாகிவிட்டது" என அவர் கூறியுள்ளார்.
இதை அப்படியே பிரதமரிடம் நரேந்தர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த உரையாடலைக் கேட்டு பிரதமர் மோடி வாய்விட்டுச் சிரித்தாராம். இந்திய ராணுவத்தின் இளநிலை ஆணைய அதிகாரியாகப் பணியாற்றும் நரேந்தர் பெர்வால், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார். மேலும் இவர் இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவர் ஆவார்.