எகிப்தில் தோண்ட தோண்ட அதிர்ச்சி... பைபிளில் சொல்லப்பட்ட 'கோஷேன் நகரம்' உண்மையா? 3,000 வருஷமா புதைந்து கிடந்த உலகம்

எகிப்தில் 'டெல் எல் - கோவா' என்ற இடத்தில் பண்டைய காலத்து மனிதக் குடியிருப்பு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அது குறித்து பார்க்கலாம்.

எகிப்தின் இஸ்மைலியா பகுதியில் உள்ள 'வாடி துமிலாத்' (Wadi Tumilat) மண்டலத்தில் அமைந்துள்ள 'டெல் எல் - கோவா' என்ற இடத்தில் பண்டைய காலத்து மனிதக் குடியிருப்பு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகத்தால் ஜூன் 2026-ன் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, எகிப்தின் 'இரண்டாம் இடைக்காலத்தைச்' (Second Intermediate Period) சேர்ந்த மிகவும் பாதுகாப்பாக இருக்கும் ஒரு பழங்காலப் பகுதியை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

டெல் எல்- கோவாவில் கண்டறியப்பட்ட இந்த சான்றுகள், எகிப்தின் 15-வது வம்ச காலத்தின் போது மக்களின் அன்றாட வாழ்க்கை, சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் எவ்வாறு இருந்தன என்பதைக் காட்டும் அரிதான பார்வையை வழங்குகின்றன. இங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள், தொழில்சார் மையங்கள் மற்றும் மயானங்கள், பண்டைய சமூகங்கள் பேரரசின் எல்லையில் எவ்வாறு இயங்கின என்பதையும், எகிப்தை கானான் (Canaan) கலாச்சாரத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய மையமாக இது எவ்வாறு திகழ்ந்தது என்பதையும் நிரூபித்துள்ளன.

டெல் எல்- கோவாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கட்டமைப்புகள் என்ன?

டெல் எல்- கோவாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி, அங்கு வாழ்ந்த மக்கள் வெறும் பிழைப்பிற்காக மட்டும் வாழாமல், மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகமாக வாழ்ந்துள்ளனர் என்பதைச் சித்தரிக்கிறது. 'ஹெரிடேஜ் டெய்லி' (HeritageDaily) கூற்றுப்படி, அகழ்வாராய்ச்சி குழுவினர் 30-க்கு 60 மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு பெரிய குடியிருப்பு வளாகத்தைக் கண்டறிந்துள்ளனர். இது சுமார் 1.5 மீட்டர் தடிமன் கொண்ட களிமண் செங்கல் சுவரால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

அங்கே பல கூடங்கள் மற்றும் அறைகளுடன் கூடிய நன்கு திட்டமிடப்பட்ட கட்டிடங்களின் வரிசையை ஆராய்ச்சி குழு கண்டறிந்தது. மேலும் இதன் கிழக்கு பகுதியில், அடுப்புகள் மற்றும் சேமிப்பு வசதிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இது அங்கு வாழ்ந்த மக்கள் சமையல் மட்டுமின்றி, பெரிய அளவிலான உற்பத்திப் பணிகளிலும் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கிறது.

விவிலியத் தொல்பொருள் சங்கம் (Biblical Archaeology Society) சுட்டிக்காட்டுவது போல், இந்த இடத்தின் வடிவமைப்பு, மக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வாழ்ந்த, பணிபுரிந்த மற்றும் வர்த்தகம் செய்த ஒரு முழுமையான குடியிருப்பு என்பதை காட்டுகிறது. இந்த நிரந்தரக் கட்டமைப்புகள் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் இருப்பு, டெல் எல்-கோவா என்பது வெறும் தற்காலிக முகாம் அல்ல, மாறாக பல தலைமுறைகளாக மக்களைத் தாங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிலையான நகரம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த இடம் உண்மையிலேயே விவிலியத்தின் 'கோஷேன் தேசமா'? 

வரலாற்றுப் புவியியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இடம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். விவிலியத் தொல்பொருள் சங்கம் விளக்குவது போல், 'வாடி துமிலாத்' பகுதியை விவிலியத்தில் விவரிக்கப்பட்டுள்ள 'கோஷேன் தேசம்' (Land of Goshen) உடன் அறிஞர்கள் நீண்டகாலமாக தொடர்புபடுத்தி வருகின்றனர். விவிலியத்தில், யோசேப்பு தனது குடும்பத்தைக் குடியமர்த்திய வளமான இடமாக இது விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி கால்நடைகள் மற்றும் ஆட்டுமந்தைகளுக்கு ஏற்றதாகவும், 'தேசத்தின் மிகச்சிறந்த பகுதி' என்றும் புகழ்பெற்றது.

ஒரு வர்த்தக மையமாகச் செயல்பட்ட ஒரு நகர்ப்புறக் குடியிருப்பின் கண்டுபிடிப்பு இந்த வரலாற்று பின்னணியுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. கிழக்கு டெல்டாவை எகிப்தின் கிழக்கு எல்லையுடன் இணைக்கும் ஒரு முக்கிய பாதையில் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த தனித்துவமான அமைப்பானது, எகிப்துக்கும் கானானுக்கும் இடையே மக்களும் பொருட்களும் நகர்வதற்குப் பொருத்தமான இடமாக இதனை மாற்றியிருக்கும். இது விவிலியத்தில் யோசேப்பு மற்றும் ஆரம்பகால இஸ்ரவேலர்களின் கதையை வரையறுக்கும் இடம்பெயர்வு மற்றும் வர்த்தகப் பதிவுகளைப் போலவே அமைந்துள்ளது.

மயானங்கள் வெளிப்படுத்தும் ரகசியங்கள் என்ன?

இங்கு செவ்வக வடிவ 'மஸ்தபா' (Mastaba) கல்லறைகள் மற்றும் அலங்கார முகப்புகளைக் கொண்ட 10 களிமண் செங்கல் கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக 'ஹெரிடேஜ் டெய்லி' தெரிவித்துள்ளது. இந்த வேறுபாடுகள் அங்கு வாழ்ந்த சமூகங்கள் வெவ்வேறு சமூக நிலைகளையும் செல்வாக்குகளையும் கொண்டிருந்தன என்பதைக் காட்டுகின்றன.

இந்தக் கல்லறைகளுக்குள் 25 முதல் 40 வயதுடைய மனிதர்களின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த தளத்தில் முதன்முறையாக, கல்லறைகளுக்கு வெளியே மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் சிலர் முடங்கிய நிலையில் (Crouched position) அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பிராந்தியத்திற்கும் காலகட்டத்திற்கும் பொதுவான முறை அல்ல என்பதால், இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள கூடுதல் அறிவியல் விசாரணை தேவைப்படுகிறது.

மனித எச்சங்களுக்கு அருகில் அதிக அளவிலான விலங்கு எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இது விலங்குகள் அவர்களின் அன்றாட உணவின் ஒரு பகுதியாகவும், இறந்தவர்களைக் கௌரவிக்க செய்யப்படும் வழிபாடுகளின் ஒரு பகுதியாகவும் இருந்ததைக் குறிக்கிறது.

Bootstrap