கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 23 ஆம் திகதி மிகவும் சுபயோக நாளாகக் கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் இங்கு திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
அதிக அளவிலான கூட்ட நெரிசலைச் சமாளிக்க, வழக்கமான நேரத்திற்கு மாறாக அதிகாலை 4 மணிக்கே திருமணச் சடங்குகளைத் தொடங்க ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளததோடு ஆலயத்தில் பிரத்தியேகமாக 6 திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டு, கூடுதல் பணியாளர்களும் பாதுகாப்புப் படையினரும் நியமிக்கப்படவுள்ளனர்.
அதேவேளை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒரு திருமணக் குழுவில் மணமகன், மணமகள் மற்றும் படப்பிடிப்பாளர் உட்பட மொத்தம் 24 நபர்களுக்கு மட்டுமே மண்டபத்துக்கு அருகில் அனுமதி அளிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி ஒரே நாளில் 334 திருமணங்கள் நடைபெற்றமையே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள திருமணங்கள் மூலம் அந்தப் பழைய சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.