அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் நிலவும் கடும் சீரற்ற வானிலைக்கு மத்தியில், அங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் மின்னல் தாக்கியதில் 16 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு உணவுக்குப் பிறகு சிறை வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கு இடையே கைதிகள் சென்று கொண்டிருந்தபோதே அனர்த்தம் நேர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் உடனடியாக உலங்குவானூர்தி மூலம் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பெற்ற 9 கைதிகள் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ள நிலையில் பலத்த காயமடைந்த ஒருவர் உட்பட 7 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒஹாயோ புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் சிறைச்சாலை பணியாளர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
ஒஹாயோ, இந்தியானா மற்றும் இலினாய்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் மத்திய மேற்கு பிராந்தியங்களில் சூறாவளி, பலத்த காற்று மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சீரற்ற வானிலை காரணமாக இதுவரை குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.