“நாட்டின் மிகப்பெரிய தந்தமுடைய யானையை காணவில்லை: யானைகள் அழிந்தால் சுற்றாடல் சமநிலை சீர்குலையும்”

இலங்கையில் யானைகளின் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்கான உரிய வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் சூழலியலாளருமான நயனக ரன்வெல்ல கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய தந்தத்தைக் கொண்ட ‘மஹசென்’ மற்றும் மிகப்பெரிய நெற்றிப் பகுதியை கொண்ட ‘செண்டோ’ உள்ளிட்ட பல முக்கிய யானைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தரவுகளின்படி, நாட்டில் ஆண்டுக்கு சுமார் 450 யானைகள் உயிரிழப்பதாகப் பதிவாகியுள்ளதுடன், பதிவாகாமல் காடுகளுக்குள் மேலும் 150க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1990ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, ஒரு வருடத்துக்கு மொத்தம் 22 யானைகள் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய இறப்பு வீதம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யானைகள் என்பது காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணும் பிரதான உயிரினமாகும். எனவே யானைகள் அழியும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சுற்றாடல் சமநிலையும் முற்றாகச் சீர்குலையும் என்றும் எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஒரு யானை தனது வாழ்நாளில் இலங்கைக்குக் குறைந்தபட்சம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித் தருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யானைகள் தொடர்ந்து இதே வேகத்தில் உயிரிழந்து வந்தால், எதிர்காலத்தில் அருங்காட்சியகங்களில் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளாக மட்டுமே யானைகளைப் பார்க்க நேரிடும் என்றும் சூழலியலாளர் நயனக ரன்வெல்ல மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Bootstrap