இலங்கையில் ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 17,592 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 277 ரூபாயால் அதிகரித்துள்ளது.
ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாதமொன்றுக்கு தேவையான குறைந்தபட்ச தொகையே உத்தியோகபூர்வ வறுமைக் கோடாக அடையாளப்படுத்தப்படுகிறது.
அதன்படி, ஜூன் மாதத்தில் கொழும்பு மாவட்டத்தின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 18,973 ரூபாயாகவும், கம்பஹா மாவட்டத்தில் 18,876 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, குறைந்தபட்ச உத்தியோகபூர்வ வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு அது 16,821 ரூபாயாக உள்ளது.
தமிழர்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 18,500 ரூபாயாகவும், யாழ்ப்பாணத்தில் 17,169 ரூபாயாகவும், மன்னார் மாவட்டத்தில் 18,019 ரூபாயாகவும் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு பதிவாகியுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,688 ரூபாயாகவும், கிளிநொச்சியில் 16,996 ரூபாயாகவும், இரத்தினபுரி மாவட்டத்தில் 17,671 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.