ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குஸ்ரா (Qusra) கிராமத்தில் பாலஸ்தீன குடும்பங்களை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேலிய குடியேற்றவாதிகளை (Settlers) அங்கிருந்து அகற்ற முடியாத சூழ்நிலையை அடுத்து, அங்கு கூடுதல் ராணுவப் படைகளை அனுப்ப உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
குஸ்ரா கிராமத்தின் எல்லைப் பகுதியில் உள்ள அபு ரிடி (Abu Ridi) மற்றும் ஹசன் (Hassan) ஆகிய பாலஸ்தீன குடும்பங்களின் வீடுகளைச் சுற்றி இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் கூடாரம் அமைத்து முற்றுகையிட்டுள்ளனர். அவர்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, உணவுப் பொருட்களும் தீர்ந்துபோயுள்ளதால் அவர்கள் உதவி கோரியுள்ளனர்.
குடியேற்றவாசிகளைக் கலைக்க இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி முயன்றபோதிலும், பெரும் எண்ணிக்கையிலான குடியேற்றவாசிகளின் எதிர்ப்பால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
பாதிக்கப்பட்ட பாலஸ்தீன-அமெரிக்க தொழிலதிபரின் குடும்பத்தினர் முறையிட்டதை அடுத்து, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டவர்களை "இஸ்ரேலிய பயங்கரவாதிகள்" எனக் குறிப்பிட்ட அவர், அவர்களை உடனடியாக அங்கிருந்து அகற்றும்படி இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளார்.