கனடாவின் கால்கரியில், முதுகலைப் படிப்பு மற்றும் பணி அனுமதி அதாவது, PGWP விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சர்வதேச மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தில் கனடா எல்லைப் பணிகள் முகமையான CBSA அதிகாரிகள் மாணவர்களின் குடியேற்ற நிலை மற்றும் அடையாள ஆவணங்களைச் சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளதாகவும், அவர்களில் பலர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. சுமார் 10 நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், CBSA அதிகாரிகள் போராட்ட இடத்துக்கு வந்து மாணவர்களின் அடையாள ஆவணங்கள், கல்வி அனுமதி மற்றும் பணி அனுமதி ஆவணங்களைச் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், யாரேனும் கைது செய்யப்பட்டார்களா அல்லது அதிகாரப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
போராட்ட இடத்தில் குடியேற்ற அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களை அச்சுறுத்துவதுடன், போராட்டத்தில் பங்கேற்பதையும் தடுக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். PGWP விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது மற்றும் ஏற்கெனவே உள்ள அனுமதிகள் காலாவதியாகும் நிலை காரணமாக மாணவர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.
கனடாவில் கல்விக்காக அதிக பணம் செலவிட்ட தங்களுக்கு, முன்பு நடைமுறையில் இருந்த விதிகளின்படி, பணி அனுமதி வழங்க வேண்டும் என்பது அவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
மேலும், நிரந்தரக் குடியிருப்பு பெறும் வாய்ப்புகள் குறைந்துள்ளதால், தங்களது சட்டப்பூர்வ நிலையைத் தொடர்ந்து தக்கவைப்பது குறித்தும் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை தனித்தனியாக மறுபரிசீலனை செய்து, கனடாவில் தொடர்ந்து தங்குவதற்கான தெளிவான நெறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.