அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆகஸ்ட் 19 வர்த்தகக் கெடுவிற்கு முன்னதாக ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில், கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) மற்றும் தலைமை பேச்சுவார்த்தையாளர் ஜானிஸ் சாரெட் (Janice Charette) ஆகியோர் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீரை (Jamieson Greer) வாஷிங்டனில் மீண்டும் சந்தித்துப் பேசுகின்றனர்.
குறிப்பிட்ட சில துறைகளுக்கான வரிகளைக் குறைப்பதாக அமெரிக்கா புதிய முன்மொழிவை வழங்கியது. ஆனால், அந்த வரிக்குறைப்பு போதுமானதாக இல்லை என கனடா கருதுகிறது. மேலும், கனடாவின் முக்கிய கனிம வளங்களுக்கு முன்னுரிமை அணுகல் மற்றும் பாதுகாப்பு, ஆற்றல் சார்ந்த ஒப்பந்தங்களையும் அமெரிக்கா கோருகிறது.
கெடு தேதிக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஏற்கனவே உள்ள துறை சார்ந்த வரிகளுடன் சேர்த்து, நூற்றுக்கணக்கான கனடிய பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கவலைகளைத் தீர்க்கும் வகையில், அமெரிக்க வாகனங்கள் மீதான பழிவாங்கும் வரிகளை நீக்குவது, பால் பொருட்கள் மீதான விதிகளில் மாற்றங்கள் செய்வது மற்றும் அமெரிக்க மதுபானங்களுக்கான மாகாணத் தடைகளை விலக்குவது குறித்து கனடா பரிசீலித்து வருகிறது.
எஃகு, வாகனம், காடுகள் மற்றும் விவசாயத் துறைகளைப் பாதுகாக்கும் நியாயமான ஒப்பந்தம் எட்டப்பட்டால், LCBO கடைகளில் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார். அதேவேளையில், SAQ கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்வது கியூபெக் அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்குட்பட்டது என அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.