ஜப்பானின் டோக்கியோவிற்கு அருகிலுள்ள சிபா மாகாணம் மற்றும் கிழக்கு ஜப்பான் பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். நீரில் மூழ்கிய காரில் சிக்கியும், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டும் இவர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரிதா சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் இரவோடு இரவாக முடங்கினர். பல ரயில் சேவைகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அப்பகுதிக்கு மிக உயர்ந்த அளவிலான 5-ஆம் நிலை அவசர நிலச்சரிவு மற்றும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.