இலங்கைக்கான GSP வரிச் சலுகைக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய நிபந்தனைகள்

இலங்கைக்கு வழங்கப்படும் GSP வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன மற்றும் மத சிறுபான்மையினர்,  LGBTQ பிரிவினர் உள்ளிட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் விரிவான பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இணக்கத்துடன் இடம்பெறும் ஒரே பாலின உறவுகளை குற்றமாகக் கருதாத வகையில் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்புப் படையினரால் சிவில் சமூகத்தினர் அச்சுறுத்தப்படுதல், தொந்தரவு செய்யப்படுதல் மற்றும் கண்காணிக்கப்படுதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சித்திரவதை, காவல்துறை அத்துமீறல் மற்றும் தடுப்புக் காவலில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனையை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் உத்தியோகபூர்வ இடைநிறுத்தத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி சர்வதேச தரங்களுக்கு ஏற்ப புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வலியுறுத்துகிறது.

அத்துடன், இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கி கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும், யானை–மனித மோதல் மற்றும் காடழிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தற்போது வழங்கப்படும் GSP சலுகை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய கட்டமைப்பு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசமும் வழங்கப்படவுள்ளது.

2024 ஆம் ஆண்டு GSP  சலுகையின் கீழ் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியின் பெறுமதி 1.5 பில்லியன் யூரோக்கள் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap