அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக மற்றும் உற்பத்தி கொள்கை அலுவலகம் வெளியிட்ட "தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம்" (The Great Transshipment Scam) என்ற அறிக்கையில், அமெரிக்க வரிகளைத் தவிர்ப்பதற்காகச் சீனா மேற்கொள்ளும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தலுக்குக் கனடாவும் ஒரு முக்கியக் காரணியாக விளங்குவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிக வரிகளைத் தவிர்க்கும் பொருட்டு, சீனா தனது ஏற்றுமதிப் பொருட்களைச் சாதகமான வரி விகிதங்களைக் கொண்ட கனடா, மெக்சிகோ போன்ற மூன்றாம் நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் அனுப்புவதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
இத்தகைய மறைமுகச் செயல்பாடுகளால் அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் $19 பில்லியன் முதல் $26 பில்லியன் டாலர் வரை வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், சுமார் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் அமெரிக்கா மதிப்பீடு செய்துள்ளது.
இத்தகைய சட்டவிரோத ஏற்றுமதிகளைத் தடுக்கும் பொருட்டு, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை "AI டிடெக்டிவ் பார்டர்" (AI Detective Border) என்ற செயற்கை நுண்ணறிவு திட்டத்தைப் பயன்படுத்தி கப்பல் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் CUSMA இலவச வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.