பிரான்ஸின் புகழ்பெற்ற 'பிரெஞ்ச் ரிவியேரா' கடற்கரைப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால், அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் விட்டுச்செல்லும் உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளில் உள்ள கழிவுகளைத் தேடி இக் காட்டுப்பன்றிகள் கடற்கரைகள், முகாம்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகளை நோக்கிப் படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பன்றிகளுக்கு உணவளிப்பது சட்டவிரோதமாக்கப்பட்டு, ப்ரெஜஸ் நகரில் 450 யூரோ தண்டப்பணம் விதிக்கப்பட்ட போதிலும், சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து உணவளித்து வருகின்றனர்.
2024-25 வேட்டையாடும் பருவத்தில் பிரான்ஸில் 8,81,372 காட்டுப்பன்றிகள் கொன்றொழிக்கப்பட்டன. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இருமடங்காகும். இருப்பினும், அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் இவை இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
பிரான்ஸ் முழுவதும் காட்டுப்பன்றிகளால் ஆண்டுதோறும் சுமார் 90 மில்லியன் யூரோ பயிர்ச்சேதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் மட்டுமின்றி ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
2025 இறுதியில், A Coruña விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் பன்றிகள் புகுந்ததால் விமானங்கள் திருப்பி விடப்பட்டு, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
2026 மார்ச் மாத நிலவரப்படி வார்சா நகருக்குள் 3,000 க்கும் மேற்பட்ட பன்றிகள் புகுந்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான பன்றிகளை வேட்டையாட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆபிரிக்க பன்றி காய்ச்சலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, கொவிட் பொது முடக்க காலத்தில் மனித நடமாட்டம் குறைந்தமை மற்றும் காடுகளுக்குப் பன்றிகளை இடமாற்றம் செய்வதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள் ஆகியவை இத்தகைய பெருக்கத்திற்குக் காரணங்களாகத் தெரிவிக்கப்படுகின்றன.