இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுடில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2047ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி முதலில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்கு சென்ற அவரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து பிரதமருக்கு பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றும் இடத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றினார். அவருக்கு கேப்டன் சோனியா சிங் சவுகான் உதவினார்.
தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டதுடன், விமானப்படை ஹெலிக்கொப்டர் மூலம் மலர் இதழ்கள் தூவப்பட்டன.
மேலும், சுதந்திர தின விழாவில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர், இராணுவ மற்றும் சிவில் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவுகூர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வந்தே மாதரம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ஒலிப்பதாகவும், ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறப்பதாகவும் தெரிவித்த அவர், செங்கோட்டையில் வந்தே மாதரம் ஒலித்தமை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.
2047ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே இலக்கு என தெரிவித்த பிரதமர், இந்தியர்களின் கனவுகள் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாகவும், இந்தியாவின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து சுயசார்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், உள்நாட்டு பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சுதேசி தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.