அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், தீவிர தேடுதலின் பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிச்சிகன் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிசாக்கி கவுண்டியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, நேற்று (14) காலை சுமார் 11.40 மணியளவில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
அங்கு மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், நான்காவது நபர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராக 39 வயதான சாட் ஹிக்மேன் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்தை சென்றடைவதற்கு முன்னரே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், மற்றொரு குடியிருப்பில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் விட்லாக் ஏரிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சந்தேகநபரின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு சந்தேகநபரும் மற்றொருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.