ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

கொழும்பு மற்றும் வொஷிங்டன் இடையிலான ஆழமான இராஜதந்திர உறவுகள் நீடித்து வரும் பின்னணியில், சீனா இலங்கையுடனான தனது உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த காலங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ கோருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேரடியாகப் பல உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். வர்த்தகப் போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீனாவுடன் இலங்கை சற்று இடைவெளியைப் பேணியதற்கும், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடைகளுக்கும் அமெரிக்காவுடனான இந்த நெருக்கமே முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது.

இதனால் இலங்கை மீது சீனா அதிருப்தியில் இருந்த போதிலும், தற்போதைய பிராந்தியப் பொருளாதார மற்றும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அந்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு இலங்கையுடன் மீண்டும் நெருங்கிய உறவை ஏற்படுத்த சீனா நகர்வுகளைத் தொடங்கியுள்ளது. சீனாவின் இந்த முடிவுக்குப் பின்னால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய பங்காற்றியுள்ளார். சீனாவுடன் நீண்டகாலமாக நல்லுறவைக் கொண்டுள்ள பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து பலமுறை சீனாவுக்குப் விஜயம் மேற்கொண்டு சீன முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவருவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக, சீனாவில் இருந்து மெட்ரோ பேருந்துகளும் சொகுசுப் பேருந்துகளும் இலங்கைக்கு வந்தடைந்துள்ளன. நாட்டின் பொதுப்போக்குவரத்துத் துறையை முற்றிலுமாகத் தலைகீழாக மாற்றி, வீதிகளில் சீன சொகுசுப் பேருந்துகளை நிரப்பும் விரிவான திட்டத்தை அமைச்சர் பிமல் முன்னெடுத்து வருகிறார். இலங்கையுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கையை இணைப்பதற்கான நடவடிக்கைகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

முன்னதாக இம்மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அமெரிக்காவுடனான இராஜதந்திர சமநிலையைப் பேணுவதற்காக ஜனாதிபதி அநுர அதில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், தற்போதைய உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கும் கிர்கிஸ்தான் உத்தியோகப்பூர்வ அழைப்பை விடுக்கவுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபரில் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் உச்சிமாநாட்டிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் பங்கேற்க உள்ளனர். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுரவும் பங்கேற்பார்.

புதிய சீனத் தூதுவராக வெய்ஹவாக்சியாங் ஒரு வலுவான அரசியல் சமிக்ஞையுடன் இலங்கையில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவருடன் சக்திவாய்ந்த சீன முதலீட்டாளர்கள் குழுவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளது. பொதுவாக, இத்தகைய முதலீட்டாளர் குழுக்களை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்க்கும் ஜனாதிபதி, நாட்டில் நிலவும் தீவிர பொருளாதார மற்றும் முதலீட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இம்முறை தனது வழக்கத்தை மாற்றி சீன முதலீட்டாளர்களைச் சந்திக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், புதிய சீனத் தூதுவர் வெய் ஹவாக்சியாங், ஜே.வி.பி தலைமையகம் பெலவத்தைவுடன் நேரடியாகப் பணிகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap