வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கடந்த 08 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு மூவரும் சேர்ந்து கூட்டு துஷ்பிரயோகம் செய்து விட்டு வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிஸார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இதன்போது, பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து நேற்றையதினம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கல், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க, பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.